திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் முத்தம் கொடுத்தது தப்பா?.. போலீசில் புகார் அளித்த மணப்பெண்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் அடுத்த பவாச கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமக்கள் இருவரும் மேடையில் அமர்ந்திருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் விழா மேடையின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மணமகன் மணமகளை முத்தமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள், விழா மேடையை விட்டு வெளியேறி தனது அறைக்கு சென்றார். உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. மீண்டும் வரவேற்பு விழா மேடைக்கு செல்ல மறுத்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘இனி அவருடன் (மணமகன்) வாழ விரும்பவில்லை; இனிமேல் எனது தந்தையின் வீட்டிலேயே இருப்பேன்; அவருடன் செல்ல மாட்டேன். நூற்றுக் கணக்கானோருக்கு முன்பாக, என்னை முத்தமிட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுபோன்ற செயலை செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால் மணமகன் தரப்பில், ‘மேடையில் முத்தம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டோம்.

அதன்படி, அனைவரது முன்பாக முத்தமிட்டால் (மணமகளை) ரூ.1,500 தருவதாக கூறினேன். அவ்வாறு செய்ய விட்டால் ரூ.3,000 தருகிறேன் என்று கூறினேன்’ என்று கூறினார். ஆனால், அந்த மணப் பெண்ணிடம் போலீசார் மீண்டும் விசாரித்த போது, தான் அவ்வாறு பந்தயம் ஏதும் கட்டவில்லை என்று கூறினார். இதனால், இருவீட்டாரையும் போலீசார் அழைத்து சமாதானப்படுத்தி மணமக்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories: