சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டபோது, காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இதனால், நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை சராசரியாக ரூ1,100 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். அப்போது, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹1,068.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என அடுத்தடுத்த மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரே நிலையாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வைத்துக்கொண்டது.