புதுடெல்லி: ராகுல் காந்தி சொன்னது போல் நாங்கள் காங்கிரசின் சொத்துக்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், முன்னாள் துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கு இடையே மோதல் நீடித்தது. இதனிடையே, முதல்வர் கெலாட், `` சச்சின் பைலட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கட்சி தலைவராக இருந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பார்த்தார். அவரைப் போன்று கட்சியை காட்டி கொடுத்த துரோகிகள் ஒருநாளும் முதல்வராக முடியாது,’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு, ``தன் மீது கெலாட் சேறு பூசுவதால் எந்த பயனும் இல்லை. இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தும் விதத்தில் தான் வளர்க்கப்படவில்லை,’’ என்று பைலட் பதிலளித்தார்.