மெட்ரோ ரயில் 5வது வழித்தடத்தில் 1,640 அடி நீளத்திற்கு 100 அடி உயரத்தில் வளைவு மேம்பாலம்: பட்ரோடு - ஆலந்தூர் வரை அமைகிறது

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 5வது வழித்தடத்தில் 1,640 அடி தூரத்திற்கு தரை மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் மெட்ரோ ரயில் வளைவு மேம்பாலம் அமைகிறது என மெட்ரோ அதிகாரி தகவல் தெரிவித்தார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், கிண்டி கத்திப்பாரா அருகே பட் ரோட்டில் இருந்து மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகம் வரையில் 1,640 அடி தூரத்திற்கு தரை மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால வளைவுப் பாதை அமைக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 118.9 கி.மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதில் 5வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த வழித்தடத்தில் கத்திப்பாரா அருகே உள்ள பட்ரோட்டில் இருந்து மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகம் வரையில் 1,640 அடி தூரத்திற்கு வளைவு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அதன்படி, 410 அடி ஆரத்துடன் கூடிய வளைவுப் பாதை கத்திப்பாரா மேம்பாலம் மற்றும் முதல் மெட்ரோ வழித்தடமான விமான நிலையம் முதல் விம்கோ நகர் மெட்ரோ ரயில் பாதை ஆகியவற்றுக்கும் மேலே அமைகிறது. தரைமட்டத்தில் இருந்து 100 அடிக்கு மேலான உயரத்தில் இந்த பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 6 பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு மெட்ரோ நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: