சென்னை: இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது. அதன்படி, ஆயுதப்படை காவலர்கள், 1,091 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், 161 இரண்டாம் நிலை சிறை காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கு, 2,99,887 ஆண்களும், 66, 811 பெண்களும், 59 திருநங்கைகளும் என மொத்தம் 3 லட்சத்து 66 ,727 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகத்தின் 35 நகரங்களில் உள்ள 295 மாவட்ட மையங்களில் இன்று நடைபெறுகிறது. எழுத்து தேர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி சீட்டு ஏற்கனவே நவம்பர் 15ம் தேதி வெளியானது.
இந்த தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் ஆணையர்கள் ஆகியோர் துணைக்குழு தலைவர்களாகவும், ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, எழுது அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை, புகைப்படம் ஒட்டப்பட நுழைவுச்சீட்டுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் நியூ கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 16 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.