இளம்பெண் மீது தாக்குதல்; பாஜ பெண் கவுன்சிலருக்கு வலை

நாகர்கோவில்: குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (37). வெளிநாட்டில் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். பிரபுராஜ் மனைவி கிரிஜா (35). கிரிஜா இரணியல் பேரூராட்சியில் 4வது வார்டு பா.ஜ கவுன்சிலராக இருந்து வருகிறார். ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் ஜென்சிமலருக்கும், கிரிஜாவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு ஸ்கூட்டரில் வந்துள்ளார். அப்போது கிரிஜா கணவர் பிரபுராஜ் (38) ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி ஸ்கூட்டருடன் கீழே தள்ளி தாக்கி உள்ளார். அதுபோல் என்னை மீறி எப்படி குடிநீர் இணைப்பு எடுப்பாய் எனகூறி கிரிஜாவும் ஜென்சிமலரை தாக்கியுள்ளார். மேலும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த ஜென்சிமலர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: