ஒப்பந்தபடி ஊதியம் கேட்டு சீன ஐபோன் ஆலையில் ஊழியர்கள் போராட்டம்: போலீஸ் தடியடி

பெய்ஜிங்: சீனாவில் உள்ள மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ஊழியர்கள் ஒப்பந்தப்படி நிறுவனம் நடந்துகொள்ளவில்லை எனக்கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பல இடங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலை ஜென்சாங்கில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த ஊழியர்கள், வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பில்லாமல் வேலை  செய்யும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒப்பந்தத்தில்  குறிப்பிட்டது போன்று உரிய  ஊதியத்தை நிறுவனம் தொழிலாளர்களுக்கு  வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து, நேற்று ஆலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Related Stories: