ஜாவா: ஜாவா தீவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 162 பேர் பலியான நிலையில், இன்று காலை சாலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் நேற்று ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இன்று காலை நிலவரப்படி இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளும், நிவாரண உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தோனேசியாவின் சாலமன் தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது; நிலநடுக்கத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இன்று காலை 7.33 மணியளவில் இந்தோனேசியாவின் சாலமன் தீவின் மலங்கோவின் தென்மேற்கு பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.