புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: சென்னையில் நாளை கனமழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் நாளை சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அத்துடன் மத்திய மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.

இது, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும். இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புதிய காற்றழுத்தம் காரணமான நாளை சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆந்திர கடலோர பகுதிகள், தமிழக - புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: