நியூயார்க்: எலான் மஸ்க் காலக்கெடு விதித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வருவதால் பல்வேறு பகுதிகளில் உள்ள டிவிட்டர் அலுவலங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். 7,500 ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகளினால் டிவிட்டர் நிறுவனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட சலுகைகளை நீக்கியதுடன், நீண்ட நேர வேலையா அல்லது 3 மாத ஊதியத்துடன் விடுப்பா? என்பது பற்றி ஆலோசிக்க 2 நாள் கெடு விதித்து, ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி அழுத்தம் கொடுத்தார். இதனால், ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால், வேலையில் இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் மேலும் பலர் வேலையை விட்டு விட திட்டமிட்டுள்ளனர். இதனால், டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் பல நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.