ஜீவனாம்ச வழக்கில் ஆஜர், கோர்ட்டில் மனைவியைப் பார்த்த மாஜி அதிகாரி திடீர் மரணம்; திருச்சியில் பரபரப்பு

திருச்சி: ஜீவனாம்ச வழக்கில் ஆஜராக வந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி, நீதிமன்றத்தில் மனைவியைப் பார்த்ததும் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(63), ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. இவர்  மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி, ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

இதில் ஆஜராக தியாகராஜனும் அவர் மனைவியும் வந்திருந்தனர். இந்நிலையில், தியாகராஜன் நீதிமன்ற வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஜீவனாம்சம் கேட்ட நிலையில் கணவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: