அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; 3 பேருக்கு வலைவீச்சு

பெரம்பூர்: அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வியாசர்பாடி முல்லைநகர் வரை தடம் எண் 46 ஜி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், இன்று அதிகாலை 2 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வியாசர்பாடி பி.எஸ்.மூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு வழியாக வந்தது.

அப்போது 3 வாலிபர்கள் திடீரென அந்த பேருந்தை நிறுத்தி டிரைவருடன் தகராறு செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த கம்பியால் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து விட்டு பைக்கில் தப்பிவிட்டனர்.

இதுபற்றி டிரைவர் சற்குணம் கொடுத்த தகவல்படி, ஓட்டேரி உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: