அரசு பணிக்கு போலி நியமன ஆணை கோவை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு

கோவை: கோவை காரமடை அருகே இரும்பொறை பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (27). டிப்ளமோ படித்த இவர் கூலி வேலை செய்து வருகிறார். சில மாதங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இவருக்கு  கலெக்டர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் சுபாகன் நிஷா (35) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இவர் சுதர்சனிடம் அரசு அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும்,  இதற்கு பணம் தர வேண்டியிருக்கும் எனக்கூறியுள்ளார். வேலைக்காக சுதர்சனிடம் ரூ.4 லட்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து, அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதர்சன், சுபாகன் நிஷாவிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

சில நாட்களில் சுபாகன் நிஷா அரசு வேலைக்கான நியமன ஆணையை அவரிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், அது போலியாக இருந்தது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதர்சன், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், சுபாகன் நிஷா மற்றும் கலெக்டர் அலுவலக கருவூலத்துறை ஊழியரான சாந்தி (45) ஆகியோர் ரூ.4 லட்சம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், சுபாகன் நிஷாவை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: