கோயம்பேடு பஸ் நிலையத்தில் கணவரை சரமாரியாக தாக்கி மனைவியிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் கணவரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது மனைவியிடம் 5 சவரன் செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் கோட்டை கருப்பசாமி (30). இவரது மனைவி அனு (25). கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த  ஊரான தேனி மாவட்டத்துக்கு அனு சென்றார். பின்னர், நேற்று முன்தினம் ஊரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவரை அழைத்து செல்வதற்காக, கணவர் கோட்டை கருப்பசாமி வந்திருந்தார்.

அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர், அனுவிடம் தகராறு செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோட்டை கருப்பசாமி ஓடிச்சென்று 3 பேரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், கோட்டை கருப்பசாமியை சரமாரியாக தாக்கினர். பின்னர், கத்திமுனையில் அனு அணிந்திருந்த 5 சவரன் நகை, பர்சில் வைத்திருந்த ₹7,000ஐ பறித்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பெண்கள் தனியாக நடந்துசென்றால் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன்களை பறித்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இங்கு கணவர் கண்முன்னே மனைவியை தாக்கி வழிப்பறி நடந்துள்ளது மற்ற பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வழிப்பறி ஆசாமிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: