சென்னை: அபிராமபுரம் பகுதியில் சொத்து தகராறில் பெரியப்பாவை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, அபிராமபுரம், குருபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் அபிராமபுரம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். பொன்ராஜூக்கும் அவரது மனைவியின் தங்கை மகன் அற்புதராஜூக்கும் தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக சில வருடங்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பொன்ராஜ் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் பொன்ராஜிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளனர். பிறகு ஆத்திரமடைந்த அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் பொன்ராஜை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.