பழங்குடியினர் சாதி சான்று சரிபார்க்க 20 ஆண்டுகளா?; பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்த எஸ்சி., எஸ்டி நலத்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பழங்குடியினர் சாதிச் சான்று சரி பார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான சரிபார்ப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதாகுமாரி, எல்.ஐ.சி. நிறுவனத்தில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தார். அவருக்கு திருத்தணி தாசில்தாரர் அளித்த பழங்குடியினர் சாதிச் சான்றை சரிபார்ப்பதற்காக, எல்.ஐ.சி. நிறுவனம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தது. இந்த சான்றிதழை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், லலிதாகுமாரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல எனக் கூறி அவரது சாதிச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிச் சான்றிதழை சரி பார்க்கும்படி மாநில அளவிலான குழுவுக்கு கடந்த 1998ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, லலிதா குமாரியின் சான்றிதழை சரிபார்த்து சாதிச் சான்றிதழை உறுதி செய்து 2020ம் ஆண்டு மாநில அளவிலான குழு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு உரிய பதவி உயர்வுகளும், பணப் பலன்களும் வழங்கக் கோரி லலிதா குமாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் லலிதாகுமாரியின் சாதிச்சான்று சரிதான் என்பதால் அவருக்குரிய அனைத்து பணி மற்றும் பணப்பலன்களை வழங்கும்படி எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும், சாதிச் சான்றை சரி பார்க்க மாநில அளவிலான சாதிச்சான்று சரிபார்ப்பு குழு 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது ஏற்க கூடியதல்ல. சான்றிதழ் சரிபார்க்கும் பணியின் தீவிரம், அதிகாரம் மற்றும் பொறுப்பு குறித்து, இப்பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவே தக்க தருணம் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: