நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் 200 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பல்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகர் ராதாகிருஷ்ணன் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

எல்லாம் அவன் செயல், அழகர் மலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணன் என்ற ஆர்கே. இவர் குடும்பத்துடன் சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று ஆர்கே வெளியே சென்றிருந்தநிலையில் வீட்டில் மனைவி ராஜி தனியாக இருந்து வந்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்து மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டரை ஒட்டியுள்ளனர். அந்த கும்பல் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 200 சவரன் நகை மற்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பின் வீட்டிற்கு அருகில் இருந்த பெண் ஒருவர் ஆர்கே வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ராஜி கட்டிபோடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக கட்டை அவிழ்த்துவிட்டு ஆர்கே மற்றும் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆர்கே வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த காவலாளி தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கொள்ளையடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து நடிகர் ஆர்கே-விடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்த நந்தம்பாக்கம் போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வீட்டில் வேலைபார்த்த காவலாளியை வீட்டில் ஒருவராக பாவித்து வந்த நிலையில் அவர் திடீரென கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் ஆர்கே குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Related Stories: