வாக்காளர் சுருக்க முறை திருத்த பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் சுருக்க முறை திருத்த பணிகளை மேற்பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க  முறை  திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்துள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சுருக்க முறை திருத்த பணிகளை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது பயணம் மேற்கொண்டு, மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வர். அவர்களின் ஆய்வுக்குப் பின்னர், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையை அனுப்புவர். இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நாட்களான 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022-ல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்களர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: