ஆயுத கடத்தல் இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த ஒப்புதல்: இங்கி. நீதிமன்றம் அதிரடி

லண்டன்: தொழிலதிபரான சஞ்சய் பண்டாரி மீது பண மோசடி தடுப்பு சட்டம், வரி ஏய்ப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே, ஆயுத கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் வசிக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு இங்கிலாந்து அரசை கேட்டு கொண்டது. அதன்படி, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப்ரீதி படேல் பண்டாரியை நாடு கடத்த ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து ஜாமீனில் வெளிவந்த பண்டாரி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி தன்னை நாடு கடத்த கூடாது என்று மேல்முறையீட்டு மனு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பண்டாரிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற இந்திய அரசின் உறுதிமொழியை ஏற்று அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தது. இதையடுத்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனுக்கு  நீதிமன்ற பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது. அவர் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்த விரைவில் ஒப்புதல் வழங்குவார் என தெரிகிறது.

Related Stories: