சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

* 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

 * அன்னதான கூடத்தில் கோயில் சேர்மன் ஆய்வு

சித்தூர் : காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலை மோதியது. இதனால் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் கோயில் சேர்மன் ஆய்வு மேற்கொண்டார்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலாகும். இக்கோயிலில் சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் தங்கம், பணம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி செல்கிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் எப்போதும் இல்லாத அளவிற்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் வரிசையில் குடிநீர், பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் மற்றும் தீர்த்த பிரசாதங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.  இந்நிலையில், கோயில் சேர்மன் மோகன் ரெட்டி அன்னதான கூடத்திற்கு நேற்று நேரில் சென்று பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பக்தர்களிடம் அன்னதானம் தரமாக உள்ளதா, சுவையாக உள்ளதா என கேட்டறிந்தார்.

Related Stories: