இலங்கை கடற்படை மீது நடவடிக்கை; எல்லை பிரச்னையில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படை மீது  நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரப்பட்டது.  நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘மனுதாரர் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கையின் பிடியில் இருந்த 68 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்,’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஜெய்சுகின், ‘மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகு, மீன்பிடி வலைகள் எதுவும் திரும்பி ஒப்படைக்கப்படவில்லை,’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘மனுதாரர் கூறிய 68 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இரு நாட்டு எல்லை பிரச்னை. அதாவது. சர்வதேச எல்லை விவகாரம். இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது,’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: