டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: அரையிறுதிக்கு மரியா சக்கரி தகுதி

போர்த் வொர்த்: டாப் 8 டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் அமெரிக்காவின் போர்த்வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 4 வீராங்கனைகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் மோதுகின்றனர். இரு பிரிவிலும் முதல் 2இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.

இந்நிலையில் 3வது நாளான இன்று நடந்த போட்டியில், நான்சி ரிச்சி பிரிவில் 3வது ரேங்க் வீராங்கனையான கிரீஸ் நாட்டின் 27 வயதான மரியா சக்கரி, 7ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயது அரினா சபலென்கா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் மரியா சக்கரி வெற்றி பெற்றார். முதல் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இருந்த சக்கரி இன்று 2வது வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில், துனிசியாவைச் சேர்ந்த 2வது ரேங்க் வீராங்கனை ஓன்ஸ் ஜபீர் (28), அமெரிக்காவின் 3ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (28) மோதினர். இதில், 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில், ஓன்ஸ் ஜபீர் வெற்றி பெற்றார். முதல் போட்டியில் சபலென்காவிடம் தோல்விஅடைந்த ஜபீர் முதல் வெற்றியை பெற்றார். ஜெசிகா 2 தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

Related Stories: