மூணாறு அருகே பசுவை அடித்துக் கொன்றது புலி: பழங்குடியின மக்கள் அச்சம்

மூணாறு: மூணாறு அருகே பசுவை புலி அடித்துக் கொன்றதால் பழங்குடியின மக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறிலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ள சாண்டோஸ் காலனியில் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகியவற்றை முக்கிய தொழில்களாக செய்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சுற்றித்திரியும் புலி, கால்நடைகளை தாக்கி வருகிறது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற மணி என்பவரது பசுவை, புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணி 3 பசு மாடுகள் வளர்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்தில் அவரது 3 பசுக்களை, புலி அடித்துக்கொன்றது. மேலும், கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் 5 பசுக்கள் புலியால் கொல்லப்பட்டுள்ளதாக பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

வனத்துறையிடம் இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், வனப்பகுதியை சுற்றி மின்சார வேலி அமைக்கப்படவில்லை என்று பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனவிலங்கு தாக்குதலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்தப்போவதாக கூறினர்.

Related Stories: