நீச்சல் கற்றுத்தர அழைத்துச் சென்றபோது விபரீதம்; கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் சாவு: கட்டிப்பிடித்த நிலையில் உடல்கள் மீட்பு

நிலக்கோட்டை:  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பாபிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவருக்கு தவமணி என்ற மனைவி, விமல்குமார் (15) என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அவரது சொந்த ஊரான பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றுக்கு மகன் விமல்குமாருக்கு நீச்சல் கற்றுத் தருவதற்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.  நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடிச் சென்றனர்.

விவசாய கிணறு இருந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது அவர்களின் உடைகள் கரையில் கிடந்துள்ளது. தகவலறிந்து நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடியதில் ராஜ்குமார், அவரது மகன் விமல் குமார் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி சடலமாக மீட்கப்பட்டனர்.

விமல் குமார் நீச்சல் பழகிய போது பயத்தில் அவரது தந்தை ராஜ்குமாரை இறுக்கி கட்டி பிடித்ததால் இருவரும் நீச்சலடிக்க முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: