மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை


சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும். இது கட்டப்பட்டால் தமிழகத்திற்கு உரிய அளவு நீர் பங்கீடு கிடைத்துவிடும். இதை புரியாமல் தமிழகத்தில் எதிர்க்கிறார்கள். நாங்கள் இதை தமிழக அமைச்சர்களிடம் விளக்க தயாராக இருக்கிறோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், உலகளாவிய கட்டுமான ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளதாகவும் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டது. இந்த அணை கட்டுமானத்தால் நீரில் மூழ்கும் வனப்பகுதிகளுக்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கான ஆய்வுகளும் நடப்பதாக செய்திகள் வெளியிடப்படுகிறது.

இங்கு அணை கட்டுமானம் நடந்து வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று பார்வையிட்ட போது, அணை கட்டுமானத்திற்கான எந்த சுவடும் இல்லை. மேகதாது மலைப்பகுதியின் கீழ்புறம் செல்வாக்கு மிக்க ஒரு நபரின் நீண்ட நெடிய மதில் சுவர் மட்டுமே இருந்ததைக் கண்டு வந்தோம். மேகதாது அணை என்பது பா.ஜ.உள்ளிட்ட கர்நாடக ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகும். தமிழக மக்கள் இதை என்றும் ஏற்க மாட்டார்கள். ஏனெனில் தமிழக வாழ்வாதாரத்தின் அடிப்படை காவிரியாகும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தில் உள்ள மேகதாது அணை வழக்கை கர்நாடக அத்துமீறலுக்கு நிரந்தர முடிவு கட்டும் முறையில் தீவிரப்படுத்தி விரைவில் முடிக்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

The post மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: