சென்னை: வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விடை பெற்றதை அடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை 29ம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தெற்கு இலங்கை மற்றும் வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதியில் காற்று சுழற்சி நேற்று முன்தினம் உருவானது. அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதியில் 29ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக ஒகனேக்கல் பகுதியில் 50மிமீ மழை பெய்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, அரியலூர், கன்னியாகுமரி உள்பட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.