எல்லா ரகசியமும் எனக்கு தெரியும் வாயை திறந்தேன்னா சும்மா நாறி போயிடும்: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இம்ரான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: ‘எனக்கு தெரிந்த ரகசியங்களை வெளியே சொன்னால், பாகிஸ்தானுக்கும் அதன் அமைப்புகளுக்கும் பெரியளவில் அவமதிப்பு ஏற்படும் என்பதால், மவுனமாக இருக்கிறேன்...’ என்று பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவரை இம்ரான்கான் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் ஆட்சி செய்யும் கட்சிகள், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாது. ராணுவம், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் கைப்பாவையாக மட்டுமே செயல்பட முடியும். மீறினால், ஆட்சி கவிழ்ப்பு நடக்கும். அந்த தலைவர், இந்த அமைப்புகளால் கொல்லவும் படுவார்கள்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பிரதமர்  பதவியை இழந்த பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரான  இம்ரான் கான், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும்படி வலியுறுத்தி வருகிறார். இதை வலியுறுத்தி, லாகூரில் நேற்று முன்தினம் அவர் பிரமாண்ட பேரணி நடத்தினார். அதில் பேசிய இம்ரான், ‘கடந்த மார்ச்சில் எனது ஆட்சி நெருக்கடியில் சிக்கியபோது எனக்கு ஆதரவாக செயல்படும்படியும், அதற்காக ராணுவ தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவுக்கு பெரியளவில் பணம் தருகிறேன் என நான் பேரம் பேசியதாகவும் ஐஎஸ்ஐ தலைவர் நதீம் அன்ஜும் குற்றம்சாட்டி உள்ளார்.

நான் எனக்காகவோ, எனது அரசியல் சுயநலத்துக்காகவோ பேசவில்லை. இந்த நாட்டின் முக்கிய முடிவுகள் பாகிஸ்தானில்தான் எடுக்கப்பட வேண்டும். லண்டனில் இருந்தோ, வாஷிங்டனில் இருந்து எடுக்கப்படக் கூடாது. இந்த நாடு திருடர்களின் கையில் சிக்கியுள்ளது. அதை மீட்க வேண்டும். உளவுத்துறை தலைவர் அவர்களே... கவனமாக கேளுங்கள். எனக்கு நிறைய விஷயங்கள், ரகசியங்கள் தெரியும். அவற்றை எல்லாம் வெளியே சொல்ல மாட்டேன்.

ஏனென்றால், அவற்றை நான் சொன்னால், இந்த நாட்டுக்கும், அதன் அமைப்புகளுக்கும் பெரியளவில் அவமதிப்பை ஏற்படுத்தும். அதை நான் சொல்ல விரும்பவில்லை. அதனால் தான், அமைதி காக்கிறேன். நான் நவாஸ் ஷெரீப்பை போல் நாட்டை விட்டு ஓட மாட்டேன். இந்த நாட்டிலேயே இருந்து, இங்கேயேதான் சாவேன்...,’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.

Related Stories: