தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல்., நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி: பள்ளி கல்வி இயக்குநரகம் ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல்., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வி  இயக்குநரகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021-2022 -ம் ஆண்டு 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, எச்சிஎல் நிறுவனம் பயிற்சியோடு கீழ்கண்ட பணி வாய்ப்புகளை வழங்குகின்றது.  தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசு பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு HCL Techbee ‘‘Early Career Program”க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது.

இந்த திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு, தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது. இன்டன்ஷிப் பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூ10,000 உதவித்தொகையை பெறலாம். பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்) HCL Technologies-ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினை பெற்றுத் தருகின்றது. மேலும் அவர்களின் கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது.

மேலும் இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee” திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள மாணவர்கள் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: