ஜெயங்கொண்டம் அருகே தைல மரக்காட்டுக்குள் 2 பெண்கள் வெட்டிக்கொலை: 5 பவுன் நகை கொள்ளை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் தைல மரக்கட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி கண்ணகி (50). இவரும் தெற்கு தெருவை சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழியும் (29) ஆகிய இருவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைலமரக்காட்டில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டில் முளைத்த காளான்களை பறிக்க நேற்று காலை 8 மணியளவில் சைக்கிளில் சென்றனர். சைக்கிளை ரோட்டில் நிறுத்திவிட்டு தைலமரக்காட்டில் யாரும் இல்லாத இடத்தில் காளான்களை பறிக்க சென்றுள்ளனர்.

அதன்பிறகு வெகு நேரம் ஆகியும் இருவரையும் காணாமல் அவர்களது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது பெரியவளையத்தில் இருந்து கழுவ்தொண்டி செல்லும் சாலையில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளது தெரியவந்தது. சைக்கிள் கிடக்கும் இடத்திலிருந்து பாதை வழியாக உள்ளே தைல மரக்காட்டுக்குள் சென்றனர். அங்கு இரண்டு பெண்களுமே முகங்கள் சிதைந்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கண்ணகியின் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. புகாரின்படி ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: