காசியாபாத்தில் சொத்து தகராறில் பயங்கரம் பெண் கூட்டு பலாத்காரம்: நிர்பயா வழக்கை போல் கொடூரம்

புதுடெல்லி: சொத்து தகராறு காரணமாக 36 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் தேடிவருவதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள ஆசிரம சாலையில் ஒரு பெண் காயங்களுடன் கிடப்பதாக நந்த்கிராம் போலீசாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்வம் குறித்து நந்த்கிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காசியாபாத் காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் கூறியதாவது: டெல்லியில் உள்ள நந்த் நாக்ரியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் 2 நாட்களுக்கு முன்பு தனது சகோதரரின் பிறந்தநாளைக் கொண்டாட குருகிராமுக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது சகோதரருக்கு தெரிந்த 2 பேருடன் அவர் காரில் சென்றுள்ளார். சகோதரரின் நண்பர்கள் அந்த பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கு கூடுதலாக 3 பேர் வரவே 5 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பி கம்பியை செருகி நடு ரோட்டில் வீசி சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வருவது தெரியவந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவாக இருக்கும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இக்கொடூர சம்பவம் குறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளருக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2012ல் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கை போல் இந்த சம்பவத்திலும் 36 வயது பெண் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: