அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்த சாந்தி (43, பெயர் மாற்றப்பட்டுள்ளது), சூளைமேடு காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 15 வயது மகளை காணவில்லை, என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை, 17 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சூளைமேடு மார்க்கெட் அருகே, இருவரும் சுற்றித்திரிவது தெரிய வந்தது. நேற்று அதிகாலை அந்த பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், இருவரையும் மீட்டு சூளைமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.