ஐதராபாத்: ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடி திடீரென மாலத்தீவுக்கு பறந்து சென்றுள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடியாக நடித்தனர். இதில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சில காலம் டேட்டிங்கில் இருந்தனர். ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. இந்நிலையில் இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இது பற்றி கேட்டபோதெல்லாம் நாங்கள் நண்பர்கள்தான்.
எங்களுக்குள் காதல் இல்லை என விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் மீடியாவுக்கு பதிலளித்து வந்தனர். சமீபத்தில் சீதா ராமம் பட விழாவில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, அந்த பட ஹீரோயின் மிருணாள் தாகூரை விட அதில் சிறு வேடத்தில் நடித்த ராஷ்மிகாவையே அதிகம் பாராட்டினார். பதிலுக்கு மேடைக்கு வந்து, விஜய் தேவரகொண்டாவை கட்டியணத்து ராஷ்மிகா நன்றி கூறினார். இது எல்லாம் மீண்டும் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஒன்றாக மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றதாக தகவல் பரவியுள்ளது.
இருவரும் ஏர்போர்ட்டுக்கு தனித்தனியே வரும் புகைப்படங்கள், வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அதே சமயம், ஒரே விமானத்தில் இவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பது உண்மைதான் என டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.