கிருஷ்ணகிரி அருகே 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காட்டெருமை உருவம் கொண்ட பாறைக் கீறல் ஓவியத்தை வரலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், சதானந்தகிருஷ்ணகுமார் மற்றும் ஐகுந்தம் வெங்கடாஜலபதி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், தற்போது 2ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் மயிலாடும்பாறையிலிருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள ஐகுந்தம் அருகில் உள்ள மூலைக்கொல்லை பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். வரலாற்றுக் குழுவை சேர்ந்த பிரகாஷ், அங்குள்ள குண்டில், ஒரு விலங்கின் உருவம் பாறைக் கீறலாக இருப்பதை கண்டறிந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

இந்த ஓவியம் பாறையில் கல்லால் கொத்தி தேய்த்து உருவாக்கப்பட்ட பாறைக் கீறல் உருவம் ஆகும்.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலக் கலாச்சாரத்தை சேர்ந்த பாறைக் கீறல் இது. இது போன்ற விலங்கின் பாறைக் கீறல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது இதுவே முதல்முறையாகும். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இத்தகைய பாறைக் கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு காட்டெருமையின் உருவமாகும். சுமார் 3.5 அடி நீளம் மற்றும் 4.8 அடி உயரமுடையதாக உள்ளது. கீறல் சுமார் அரை முதல் ஒரு அங்குல அகலமுடையதாய் உள்ளது. இக்கீறல் நன்கு தேய்த்து வழவழப்பாக்கப்பட்டுள்ளது. இவ்விலங்கு தலையை மேல்நோக்கி தூக்கியிருக்கிறது. முகம் சிறியதாகவும் கூர்மையாகவும் உள்ளது. இரு கொம்புகளும் பெரியதாய் ஒரு வட்டம் போன்று உள்ளது. இந்தியாவின் பிற இடங்களில் செங்காவியில் வரையப்பட்டுள்ள உருவத்தை இது பெரும்பகுதி ஒத்துள்ளது. அருகே இதே அளவில் இன்னொரு விலங்கின் உருவமும் தெளிவில்லாமல் உள்ளது. ஒரு மயில் தோகை விரித்து நேரே நிற்பது போன்ற கீறலும் காணப்படுகிறது.

இப்பாறையில் 3 இடங்களில் புத்த பாதம் அல்லது விஷ்ணு பாதம் போன்று கீறப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு செருப்புப் போன்று உள்ளதால், செருப்படிச்சான் பாறை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கண்டுபிடிப்பு பற்றி பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கூறுகையில், ‘தமிழக முதல்வர் சட்டசபையில் குறிப்பிட்டது போல, மயிலாடும்பாறை பகுதியில் தமிழக வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சக் கூடிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வெளிவருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இரும்பின் பயன்பாடு 4000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக வெளிவந்த அறிவியல் காலக் கணிப்பை உறுதி செய்யும் விதத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அதே காலத்தை சேர்ந்த செங்காவி ஓவியம் மற்றும் கற்திட்டைகளின் தொடக்கத்தினையும் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர்.

 தற்போது கண்டறியப்பட்டுள்ள இப்பாறைக் கீறலும் புதிய கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளதால், இப்பகுதியில் புதிய கற்காலம் நன்கு வேரூன்றி இருந்ததும், அக்கலாச்சாரத்தின் இடையிலேயே இரும்புக் காலம் எனப்படும் பெருங்கற்படைக் காலம் உருவாகத் தொடங்கியிருப்பதையும் நன்கு உணர முடிகிறது. முதல்வர் கூறியது போல், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் எழுதப்படும் என்று கூறிய கூற்றை, இப்பாறை கீறல் மேலும் வலுப்படுத்துகிறது,’ என்றார். இந்த ஆய்வின்போது, கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவர் நாகராஜ், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், வரலாறு ஆசிரியர் ரவி, சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், அறிஞர், தம்பிதுரை, அஸ்லாம், தங்கமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: