இஸ்லாமாபாத்: வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தில் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலக அறையில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகள், ஆடியோவாக சமீபத்தில் வெளியாகி அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கானும், இதர எதிர்கட்சி தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.