ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 127 பேர்உயிரிழந்தனர். கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. இதில் உள்ளூர் அணியான அரேமா - பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
சொந்த மண்ணில் தங்களுடைய அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் ரசிகர்கள், கடும் கோபமுற்றனர். கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததையடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு நுழைந்தனர். அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டனர். இதை கட்டுப்படுத்த கூட்டத்தின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதையடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கலவரம், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 180 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.