தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை

சென்னை: பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு முடிவு வெளியீடு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்தைத் திட்டத்தின் படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள் கடந்த 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. 4 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடக்க இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22, 23ஆம் தேதி களுக்கு தள்ளி வைக்கப்பட்டன.

எனினும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைவிலான மாணவர்கள் ஏப்ரல் 12ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தேர்தல் பணி காரணமாக ஏப்ரல் 15 முதல் 21ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்தல் முடிந்ததும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி கடந்த 22, 23ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த சூழலில் நேற்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 2ஆம் வாரத்தில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

The post தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: