மாஸ்கோ: உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் புடின் இன்று முறைப்படி வெளியிடுகிறார். நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது 7 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் ரஷ்ய படைகளின் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு கடந்த 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. இது குறித்து ரஷ்யா நியமித்த தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘‘ஜாபோர்ஜியாவில் உள்ள 93 சதவீத வாக்காளர்கள், கெர்சனில் 87 சதவீதம், லுஹன்ஸ்க்கில் 98 சதவீதம், டொனட்ஸ்க்கில் 99 சதவீத மக்களும் வாக்கு செலுத்தினர். பெருவாரியான மக்கள் தங்கள் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கவே விரும்புகின்றனர். எனவே, இந்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க ரஷ்ய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றார். இதைதொடர்ந்து 4 பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.