காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை: மனைவி, மாமனாருக்கு ஆயுள்

மயிலாடுதுறை: காதல் திருமணம் செய்த வாலிபர் கொலைவழக்கில் மனைவி மற்றும் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி. இவரும் சதீஷ்குமார்(30) என்பவரும் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலைமதி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் 2019ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி சதீஷ்குமார் தனது மனைவியை அழைத்து வர தனது மாமனார் நாகராஜன் வீட்டுக்கு சென்றார்.  அப்போது அங்கு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கலைமதியும், அவரது தந்தை நாகராஜனும் சேர்ந்து சதீஷ்குமாருடன் சண்டையிட்டனர். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தினார். கலைமதி செங்கல்லை எடுத்து தனது கணவர் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால்வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜன், கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சதீஷ்குமாரை கொலை செய்த நாகராஜன்(60), அவரது மகள் கலைமதி (30) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.

Related Stories: