பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் குட்கா பொருட்களின் நடமாடத்தை தடுக்கவும், அதனை ஒழிக்கவும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வியாசர்பாடி எம்கேபி நகர் 8வது மெயின் ரோடு பகுதியில் பாண்டியன் (54) என்பவருக்கு சொந்தமான அம்பாள் கூல் பார் என்ற கடையில் குட்கா விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையிலிருந்து குட்கா பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.