வாஷிங்டன்: பூமியின் மீது மோதக் கூடிய விண்கற்களின் மீது விண்கலத்தை மோதி, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான முதல் கட்ட சோதனையை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது.
விண்வெளியில் ஏராளமான பிரமாண்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை பூமியின் மீது மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் கூட, சில பிரமாண்ட விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக வந்து சென்றன. இந்நிலையில், பூமியை நோக்கி மோதக் கூடிய வகையில் வரும் விண்கற்களின் மீது விண்கலத்தை அதிக வேகத்தில் மோதச் செய்து, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான சோதனையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈடுபட்டுள்ளது. இதற்காக, ‘இரட்டை விண்கல் திசை திருப்பும் சோதனை’ (டார்ட்) என்ற பெயரிலான விண்கலத்தை, 9 மாதங்களுக்கு முன் அது ஏவியது.