குமரியில் கண்ணி வைத்து மிளா வேட்டை ஒருவர் கைது: 6 பேர் தப்பி ஓட்டம்-சமைத்து சாப்பிட்ட 12 பேருக்கும் அபராதம்

நாகர்கோவில் :  கன்னியாகுமரி அருகே கண்ணி வைத்து மிளாவை வேட்டையாடியவர் மற்றும் அதை சமைத்து சாப்பிட்டவர்கள் என 13 பேர் சிக்கினர். தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகிறார்கள்.கன்னியாகுமரி வன கோட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்துக்குட்பட்ட, ஆரல்வாய்மொழி பிரிவு மருந்துவாழ்மலை அருகில் உள்ள மயிலாடி ஆலடிவிளை பகுதியில், கடமான் என அழைக்கப்படும் மிளாவினை கண்ணி வைத்து பிடித்து, இறைச்சிக்காக வெட்டி சிலர் பங்கு போடுவதாக மாவட்ட வன அதிகாரி இளையராஜாவுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் கோட்ட உதவி வன பாதுகாவலர் சிவக்குமார், ஆரல்வாய்மொழி பிரிவு வனவர் பால சந்திரிகா, வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், அசோக், சிவராமன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிவா, பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்த சென்றனர்.

இந்த சோதனையின் போது மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த ஒற்றைவீரர் மகன் லிங்கம் (48) என்பவரது வீட்டில் நடந்த சோதனையில் மிளா இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லிங்கத்தை பிடித்து விசாரணை செய்ததில், மயிலாடி பகுதியை சேர்ந்த செல்வராஜன் என்பவரது பட்டா நிலத்தில், அவரின் உடந்தையுடன் மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் சுயம்புலிங்கம், ஹரிராம் மகன் ஜோசப் மற்றும் சூர்யகுமார், ெஜகன் , நந்து ஆகியோர் மேற்படி பட்டா நிலத்தில் 2 மிளாக்களை கண்ணி வைத்து கொன்று அதன் இறைச்சியை பங்கு போட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக தற்போது லிங்கத்தை மட்டும் வனத்துறையினர் கைது செய்தனர். மற்ற 6 பேரை தேடி வருகிறார்கள்.

இது சம்பந்தமாக லிங்கத்திடம் நடந்த தொடர் விசாரணையில், பங்கு போட்ட இறைச்சியை அவரது உறவினர்களான சொத்தவிளை கண்ணன், அவரது மனைவி தட்சணா தேவி, சொத்தவிளை ஒசரவிளையை சேர்ந்த கிருஷ்ணதங்கம், அவரது மனைவி சுமித்ரா தேவி, ஒசரவிளையை சேர்ந்த ரவிக்குமார், அவரது மனைவி கோசலாதேவி, மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி ஜெயலெட்சுமி, பெருமாள்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி வசந்தா, மணவிளையை சேர்ந்த சுயம்பு, அவரது மருமகள் செந்தாமரை லெட்சுமி ஆகியோருக்கு கொடுத்தது தெரிய வந்தது. அதன் பேரில் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி மிளா கறியை சமைத்து சாப்பிட்ட குற்றத்துக்காக மேற்படி 12 பேரும் கைது செய்யப்பட்டு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: