சென்னை நகரில் 15 மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பு பணிகள், மின்சார வாரிய புதை மின்வடம் பாதிக்கும் பணிகள், குடிநீர் வாரியத்தின் புதிப்பிக்கு பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காதவாறு கடலில் கலக்கும் வகையில் 5,630 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1,334 கி.மீ. மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

15 மண்டலங்களில் நடைபெறும் இந்த பணிகள் அனைத்தையும் பருவமழைக்கு முன்னரே முடித்துவிட ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, சென்னையில் வடபழனி, பூந்தமல்லி, திருவான்மியூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகளும், மின்சார வாரியத்தின் சார்பாக புதை மின்வடம் அமைக்கும் பணிகளும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பாக பழைய குடிநீர், கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றனர்.

ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளின் போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளின் பின்பற்றி தடுப்புகள் அமைக்காததால் சில விபத்துகளும் நடந்துள்ளன. சென்னையில் ஒரே நேரத்தில் பல்வேறு துறைகள் சார்பாக வேலைகள் நடந்து வரும் நிலையில் பணிகளை விரைவாக முடிக்க ஒருங்கிணைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால், ஒரு துறையின் வேலை முடிந்த பின்னர் மற்ற துறைகளின் வேலை தொடங்கும் நிலை இருக்கிறது. பல பகுதிகளில் பணிகள் தொடங்கி 6 மாதங்களாகியும் நிறைவு பெறாததால் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்த சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார் மழைநீர் வடிகால்கள் கட்டுமான பணிகள் முதல்கட்டமாக தற்போது 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறினார். மண்டலத்திற்கு 1 ஐ.ஏ.எஸ். அதிகாரி என 15 பேர் நியமிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மாநகராட்சியின் நிர்வாகத்தின் கெடுபிடியினால் ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக வெளிமாநில தொழிலாளிகளை பணியமர்த்தி கட்டுமான பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்ட பகுதிகளில் 173கி.மீ. நீளத்திற்கு வடிகால் அமைக்க திட்டமிட்டு 130கி.மீ. அதாவது 75 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல 2-ம் கட்ட முன்னுரிமை இடங்களான மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் 40 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்று தெரிவித்தனர். ஆனால், முழுமையாக பணிகள் முடிவடையாத நிலையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது இன்னும் சவாலாக மாறியிருக்கிறது என்பதே பொதுமக்களின் கவலையாக இருக்கிறது.

Related Stories: