முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் 445 விடுதிகள் மேன்ஷன்களில் அதிரடி சோதனை: 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 445 விடுதிகள், மேன்ஷன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கொலை, கொலை முயற்சி, ஆள்கட்டத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி வார இறுதி நாட்களில் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள விடுதிகள், மேன்ஷன்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள 445 விடுதிகள், மேன்ஷன்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்றும் அனுமதியின்றி மற்றும் விசா காலம் முடிந்து வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் 98 முக்கிய இடங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது.  இந்த வாகன சோதனையில், மது போதை, விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிககையாக 2 நபர்கள் மீதும், திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகள், குட்கா விற்பனை செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: