லெபனான்: கடுமையான ெபாருளாதார நெருக்கடியால் இடம்பெயர்ந்த போது லெபனானில் படகு கவிழ்ந்து 94 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் மாயமானதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மத்திய தரைக்கடல் பகுதியான லெபனான் நாட்டில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பரிதாபமான சூழ்நிலைக்கு மாறியுள்ளது. அதனால் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், லெபனானில் மட்டும் 90 சதவீத மக்களுக்கு வேலை இல்லாததால் அங்குள்ள மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
லெபனானில் வாழ்க்கையை நடத்துவது பெரும் சுமையாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் சிறிய படகுகள் மூலம் கடலைக் கடந்து அண்டை நாடுகளுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் லெபனானில் இருந்து சிரியாவுக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கடலில் படகில் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 94 பேர் உயிரிழந்தனர். எனினும், உயிரிழந்த அனைவரும் லெபனான் மற்றும் சிரியாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தின் போது படகில் 150க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 20 பேர் சிரியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சிரியாவை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.