கோலாலம்பூரில் இருந்து வந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

மீனம்பாக்கம்: அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மன்பிரீத்சிங் (30). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல இடங்களில் தேடியும், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அரியானா போலீசார் அறிவித்தனர். மேலும், அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அதில், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அரியானா மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி மன்பிரீத்சிங் என தெரியவந்தது.

அவரை மடக்கி பிடித்து, விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அரியானா மாநில போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: