ஸ்ரீபெரும்புதூர் அருகே அகழாய்வில் பழங்கால தங்க ஆபரணங்கள் கண்டெடுப்பு

சென்னை: வடக்குபட்டு பகுதியில் பழங்கால தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே,  ஒரகடம் அடுத்த வடக்குபட்டு கிராமப் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜூலை 3ம் தேதி முதல் நடந்து வருகிறது.  குறிப்பாக100 அடி நீளம், 100 அடி அகலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து, சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாய்வு பணியில்  குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பழங்கால கட்டிட சுவர்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அதனை சுற்றி பள்ளம் தோண்டியபோது பழங்கால கல் மணி, கண்ணாடி மணி, எலும்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு மேடான பகுதியில் அகழாய்வு பணி துவங்கியது. இந்த இடத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட்டட் ஓடுகளும், இதுதவிர கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் காதணிகள், சுடுமண் வட்ட சில்லுகள், இரும்பு பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 0.82 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் இரண்டு கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: