நெல்லை பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் கைதான 2 பேர் ஊருக்குள் நுழைய தடை: நெல்லை போலிஸ் உத்தரவு

நெல்லை: தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக  இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளிடம் கூட  தீண்டாமை வெளிக்காட்டும் சாதி கொடுமை உள்ளது. தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது. பாஞ்சாங்குளத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று தின்பண்டம் வாங்க முற்படுகின்றனர்.

அப்போது அந்த கடைகாரர், உங்களுக்கு எல்லாம் தின்பண்டம் கொடுக்க முடியாது,  ஊர்க்கூட்டம் போட்டு  முடிவு செய்யப்பட்டுள்ளது அதனால் உங்களுக்கு கடையில் இருந்து எதுவும் தரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது எனக் கூறுகிறார், அதற்கு ஏதும் அறியாத அந்த அப்பாவிச் சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர்.அதற்கு அந்த கடைக்காரர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்கள் ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள், அதனால் உங்க தெருகாரர்கள் இங்கு வரக்கூடாது,  அதனால் நீங்கள் யாரும் இங்கு பொருள் வாங்க முடியாது என்றும், உங்கள் தாய் தந்தையரிடம் போய் சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வைரலானதை அடுத்து சிறுவர்களிடம் தீண்டாமையில் ஈடுபட்டது தொடர்பாக பெட்டிக் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் கைதான 2 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  ராமசந்திரன், மகேஸ்வரன் ஆகியோர் பஞ்சாங்குளம் கிராமத்துக்குள் வர தடை விதித்து நெல்லை போலீஸ் உத்தரவிட்டுள்ளது. ஆதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கு கடையில் தின்பண்டம் விற்க கூடாது என கட்டுப்பாடு விதித்ததால் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர் கட்டுப்பாடு விதித்து குழந்தைகளுக்கு தீண்டாமை கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் முக்கிய பிரிவை காவல்துறை பயன்படுத்தியுள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிபவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறக்கூடிய சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Related Stories: