மின்வாரிய அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் கம்பி திருட்டு: ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 3 பேர் கைது

அம்பத்தூர்: கொரட்டூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை கொரட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் மின் கம்பிகளுடன் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார் (19), சூர்யா (20) என்பதும், இவர்கள் பாடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் பாடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 25 கிலோ மின்சார கம்பிகளை திருடிச் சென்று, அதே பகுதியில் பழைய இரும்புக்கடை நடத்தி வரும் மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (20) என்பவரிடம் விற்க முயன்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மின்கம்பிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: