ஆவடி மாநகராட்சியில் 1099 பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளில் இன்று காலை 1099 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டி, தானும் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று காலை மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அங்கு மாணவர்களுக்கு காலை உணவு சமைக்கும் நவீன சமையலறை கூடத்தை பார்வையிட்டு திறந்து வைத்தார். இதையடுத்து, அப்பள்ளியை சேர்ந்த 369 மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து, அவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவை அமைச்சர் சா.மு.நாசர் ஊட்டி, தானும் சாப்பிட்டு மகிழ்ந்தார். இதையடுத்து, ஆவடி மாநகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளில் படிக்கும் 1099 மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணைமேயர் சூரியகுமார், ஆவடி கிழக்கு பகுதி செயலாளர் பேபி சேகர், சார் ஆட்சியர் மகாபாரதி, திட்ட இயக்குனர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் இ.ராமன், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், மாநகர செயலாளர் ஆசிம் ராஜா, பகுதி செயலாளர் நாராயண பிரசாத், பொன்.விஜயன், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: