குழந்தைகள் இல்லத்தில் ஆறரை ஆண்டுகளாக அடைத்து வைத்து 13 வயது சிறுமி பலாத்காரம் போக்சோவில் பாதிரியார் கைது: ஒன்றரை ஆண்டுக்கு பிறகு நடவடிக்கை

சென்னை: மாமல்லபுரத்தில் தான் நடத்தி வந்த குழந்தைகள் இல்லத்தில் இருந்த சிறுமியை கர்ப்பிணியாக்கி, ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்த பாதிரியார்  கைது செய்யப்பட்டார். மாமல்லபுரம் அடுத்த வாயலூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து, குழந்தைகள் இல்லத்தை பாதிரியார் சார்லஸ் (59) என்பவர் நடத்தி வருகிறார். இந்த குழந்தைகள் இல்லத்தில் இருந்த 13 வயது சிறுமியை கடந்த ஆறரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி திடீர் கர்ப்பமானார். இதனால் ஒரு அறையில் சிறுமியை அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கடந்த ஆண்டு தப்பித்து, உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, அந்த சிறுமியின் உறவினர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து வந்து மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிரியார் சார்லஸ் தான் நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், தலைமறைவான பாதிரியார் சார்லஸ் சென்னை கோயம்பேட்டில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாமல்லபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, எஸ்ஐ உஷாராணி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற பாதிரியாரை சென்னை, அரும்பாக்கம் போலீசார் உதவியோடு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Related Stories: